இலங்கையை குறி வைக்கும் ட்ரம்ப் : பிரேரணையை கொண்டுவருகிறது அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான பிரேரணை இம்முறை பிரித்தானியா முன்வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பிரேரணையை இம்முறையும் அமெரிக்காவே முன்வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகளுடன் இணை அனுசரனையுன் குறித்த பிரேரணையை இம்முறையும் அமெரிக்காவே முன்வைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதிவரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, டொனால்ட் ட்ரம்ப தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்காவின் முன்னைய அரசாங்கத்தைப் போல தற்போதைய அரசாங்கம் கரிசனை கொள்ளாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணையை அமெரிக்கா முன்வைக்குமா என்பது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்று முன்வைக்கப்படும் என்று கடந்த வாரம் நடந்த ஒழுங்கமைப்புக் கூட்டத்தில் பிரித்தானியாவினால் அறிவிக்கப்பட்டது.
எனினும், இணை அனுசரணை வழங்கும் பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து இம்முறையும் அமெரிக்காவே தீர்மானத்தை முன்வைக்கும் என்று ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு தீர்மான வரைவு இன்னமும் தயாரிக்கப்படாத போதிலும், இது 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை அடியொற்றியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 18 மாத காலப்பகுதியில் இலங்கையினால் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களை வரவேற்கும் வகையில் இந்த தீர்மானம் அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை கவனத்தில் எடுத்து, நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்தினால் இன்னமும் நிறைவேற்றப்படாதுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மான வரைவு அமையும் என்று ஜெனிவாவில் உள்ள உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை குறித்த தீர்மான வரைவு பெரும்பாலும், ஒரு பக்கம் அல்லது அதனை விடவும் குறைவான அளவிலேயே இருக்கும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் வகையில் இம்முறை முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை இலங்கை அரசாங்கம் எதிர்ப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், குறித்த பிரேரணையானது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் பிதான அனுசரனையுடன் கடந்த முறை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரைனை வழங்கியிருந்தது.

எனினும், இம்முறை முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கும் இலங்கை அரசாங்கம் இணை அணுசரனை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 Kommentare:

Kommentar veröffentlichen