யாழ். கர்ப்பிணிப்பெண் படுகொலை! ஈரேழு பேரில் இருவரை தேடிப்பிடித்த சிறுவன் : நீதிபதி கேட்ட கேள்வி?

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கர்ப்பிணிப்பெண் படுகொலையில் சந்தேகநபரை அடையாளம்காட்டும் அடையாள அணிவகுப்பு நேற்று இடம்பெற்றது.

இதில் கண்கண்ட சாட்சியாக உள்ள மாற்றுத்திறனாளி சிறுவனிடம் நீதிபதி கேள்வி கேட்டதுடன், அடையாள அணிவகுப்பின்போது சில விதிமுறைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வாய்பேச முடியாத குறித்த சிறுவனிடம் ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். றியால் “நீங்கள் எதற்காக வந்துள்ளீர்கள்?” என வினவியுள்ளார்.

இதற்கு சிறுவன் “ஊர்காவற்துறை பெண் படுகொலை தொடர்பாக சந்தேகநபர்களை அடையாளம் காட்ட வந்துள்ளேன்” என்று சைகை மூலமாக தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்துறை கர்ப்பிணிப்பெண் படுகொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் அடையாள அணிவகுப்பிற்கு பொலிஸார் தயார்படுத்தியிருந்தனர்.

இதில் ஒரு சந்தேகநபருக்கு 7 பேர் வீதம் இரு சந்தேகநபர்களுக்கும் 14 பேர் அடங்களாக அனைவரையும் வரிசைப்படுத்தியிருந்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் ஏனையவர்களுடன் கலந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் 14 பேரில் குறித்த இரு சந்தேகநபர்களையும் அடையாளம் காட்டுமாறு மாற்றுத்திறனாளி சிறுவனிடம் நீதவான் கோரியுள்ளார்.
இதன்பின்பு குறித்த ஈரேழு பேரில் முதலில் ஒருவரையும், பின்னர் மற்றைய சந்தேகநபரையும் குறித்த சிறுவன் சரியாக தேடிப்பிடித்துள்ளான்.
தொடர்ந்து, இருவரின்மீதான வழக்கு திறந்த நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், இவர்களை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். றியால் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Kommentare:

Kommentar veröffentlichen