காற்றினில் பறக்கின்றது கூட்டமைப்பின் பங்காளிகளது மானம்!

காலநீடிப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் வடகிழக்கு தமிழ் தரப்பிடையே கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.அதிலும் காலநீடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக சொன்ன கூட்டமைப்பின் பங்காளிகள் அந்தர் பல்டியடித்தமை மக்களிடையே கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே வவுனியாவில் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதற்கு பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்று 17ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றது.
ஜெனிவா தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு கால அட்டவணையுடன் கூடிய அவகாசத்தைக்கடும் நிபந்தனையுடன் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த தீர்மானத்திற்கு எதிராக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் கறுப்புக்கொடிகளை ஏற்றி தமது எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.


இந்நிலையில் நள்ளிரவுவேளை வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்ட தனது தந்தை எங்கே என்று தந்தையை இழந்த மகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை கடத்திச்செல்லப்பட்ட தனது கணவன் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்த இளம்குடும்பத் தலைவி ஒருவர், அன்றாட வாழ்க்கையைக் கொண்டுநடத்த முடியாது அல்லலுறுவதாக கவலை வெளியிட்டுள்ளார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen