தற்கொடை


வள்ளுவரை நேற்று வழியிலை
கண்டேன் நான்
வீட்டுக்கழைத்தேன்
விறாந்தைக் கதிரையிலே
வந்திருந்து கற்றே மனந்திறந்து
பேசினார்.

ஆயிரத்து முந்நூற்று முப்பது
அருங்குறளும்
பாயிரத்தோடு பகர்ந்தீர்கள்,
வள்ளுவரே!
பின்னர் எதுவும் எழுத
நினைந்ததுண்டா?
சொன்னால் மிகவும் சுவையாய்
இருக்குமே!
இப்படி நான் கேட்டேன்;
இவரோ சிரிக்கின்றார்.
ஆற்றல் மிகுந்த அறிஞன் என்று
தான் என்னை
நானே கருதி நயந்து கொண்டு
வானுறையும்
தெய்வத் திரளின் இடையே
செருக்குடனே
தங்கி இருந்தேன்.
தமிழ்க்குலத்துச் செய்திகளை
ஆர்வமுடன் கேட்பேன் நான்
ஆகாய ஓசையிலே!
தாயகச் செய்தி தவற
விடமாட்டேன்.

ஏதேதோ எல்லாம் எடுத்து
விரிவாகப்
பேசினார் அந்தப் பெரிய
தமிழ்ப் புலவர்.

“முப்பால் தயாரித்து முன்பெமக்குத்
தந்தீர்கள்;
இப்பால் பருகுங்கள்” என்றேன்
இசைந்தெடுத்துப்
பாலைப் பருகிப் பரிவோடு
பேசுகிறார்.

“இல்லாப் பொருள் குறளில் இல்லை
என்று நான் இருந்தேன்.”
“மெய் தானே அய்யா!”
“வீடு தம்பி, வீண் முகமன்.”
“ஏனய்யா?”
“தம்பி, இந்த ஈழத்தமிழகத்தில்
காலை வைக்கும் மட்டும் தான்
அந்தக் கருத்தினை நான்
கொண்டிருந்தேன்.”
“பின்னர்?”
“குறள்கள் புதியனவாய்ச்
செய்யத் தொடங்கி விட்டேன்.”
“செய்தீரா, வள்ளுவரே?
புத்தம் புதிய குறள்கள்
புனைந்தீரா?
காட்டுங்கள் அய்யா;
நான் கற்கத் துடிக்கின்றேன்.”

சுத்த வெள்ளைத் தாளின்
சுருளொன்றைக் காட்டினார்.
“பத்துப் பத்தாகப் பல குறள்கள்
யான் இயற்றி
வைத்துள்ளேன்” என்றார்.

“வழங்கி அருள்க” என்றேன்.
“எல்லாம் தருதல் இயலாது;
கேட்டு விட்டாய்;
பத்துக் குறளைப் பரிசாய்த்
தருகின்றேன்-
இந்தா பிடி” என்றார்.
இன்னும் ஒன்று சொல்லுகிறார்.
-“தற்கொடை என்னும்
தலைப்பில் எழுதியுள்ளேன்;
தற்கொடை என்றால், தன்னுயிரை
மக்களுக்காய்
ஈதலே ஆகும்;
இதனை விளக்கியுள்ளேன்”
என்றார் புலவர்.
எழும்பி மெல்ல அப்பாலே
சென்றார்.
மறைந்தார்.
சிறந்த குறள் பத்தும்
இங்கே சரியாய் எழுதியுள்ளேன்
– பாருங்கள்
அந்தப் புதிய அதிகாரம்
காணுங்கள்.

2

தற்கொடை என்ப, தமிழீழ
மைந்தர்கள்
நிற்கும் புதிய நிலை.

தன்னுயிரைத் தான் ஈயும்
சான்றான்மை தற்கொடையாம்
என்ன நிகர் ஆகும் இதற்கு?

ஓர்ம உரமும் துறவும்
உறுதியுமே
கூர்மதியோர் ஆவிக் கொடை.

கற்கண் டினிது பழங் கள்இனிதே.
என்பார்கள்
தற்கொடையின் தன்மை தெரியார்.

ஆவி கொடுக்கும் அசையாத்
திடம் கொண்ட
வாலிபர்கள் வாழ்வதிந்த மண்.

சொந்த மண் மீளச் சுடுகலன்கள்.
ஏந்திடுவோர்
தந்திடுவார் தங்களுயிர் தாம்.

நஞ்சைக் கழுத்தில் நகையாய்
அணிவோரின்
நெஞ்சம் நிரம்ப நெருப்பு.

வெங்கொடுமைச் சாவும் விளையாட்டுக்
கூடமாம்
பொங்கு சினம் கொண்ட புலிக்கு.

அச்சம் அறியார்; அடங்கார்;
அவர்க்குயிரோ
துச்சம்; எதிரி வெறுந் தூள்.

கொல்லோரை மோதிக் கொடுபட்ட
இன்னுயிரை
எல்லா உலகும் தொழும்.

3

தாடித் தமிழர் – உண்மைச்
சாரத்தை நல்ல குறட்
சாடியிலே தேக்கி வைக்கும்
தந்திரத்தைக் கையாளும்
மோடி தெரிந்த முனிவர்
மறை மொழியில்
ஓடும் தெளிவை உணர்ந்து
பயன் பெறுவோம்.

வள்ளுவரே எங்கள் வழிகாட்டி
நம்மவரின்
உள்ளமிசை ஊரும் ஒளி!

உங்களுக்குக் கேட்கவில்லையா?
தா. இராமலிங்கம்

உங்களுக்கு கேட்கவில்லையா?

சிறீலங்காச் சிறைகளிலே
எமது இளைஞர்
உண்ணாமல் நோன்பிருந்து
உடல்வற்றி உலர்ந்து ஒடுங்க
உள்ளம் மினுங்கி
உதித்த நிலவொளியில்
விழித்து எழுங்கோ என்று
கூவி அழைத்த குரல்
இங்கு எம்மைத்
தட்டி எழுப்புகுதே!

உங்களுக்குக் கேட்கவில்லையா?

முற்றுகை சுட்டெரிப்பு
சிறைபிடிப்பு எல்லாம்
தமிழ் இனத்தை முடமாக்கி
இருந்து அரக்க வைக்கும்
திட்டமிட்ட சூழ்ச்சிச்
செயற்பாடு அல்லவோ?

அவர்கள் கேட்கிறார்கள்:
“எங்களை நீங்கள் மறந்துவிட்டீர்களா
எங்களை உங்களுக்கு
அடையாளம் தெரிகிறதா?” என்று.

உங்களுக்குக் கேட்கவில்லையா?

மரண தேவதைகள் சூழ்ந்து
மலர்தூவி
மங்களம் பாடி வாழ்த்த
சிறைக்கம்பி பாடி வாழ்த்த
சிறைக்கம்பி தாவிச்
சிறகடித்து வந்த குரல்

எமைஇங்கு
தட்டி எழுப்புகுதே!

அவர்கள் கேட்கிறார்கள்:
“உங்களை நீங்கள் மறந்துவிட்டீர்களா?
உங்களை உங்களுக்கு
அடையாளம் தெரிகிறதா?” என்று.

உங்களுக்குப் புரியவில்லையா?
ஏரிவளர்ந்த இளங்காளை மாடுகள்
பாரம் இழுத்து வருவதைப் பாருங்கோ!
லாடன் கட்டிய கால்களைத் தூக்கி
வேகமாய் நடப்பதைப் பாருங்கோ!
கப்புகள் வளைகள் கம்புகள் திடுகுகள்
முன்வந்து உதவிடும் மக்களைப் பாருங்கோ!

அவர்கள் அழைக்கிறார்கள்:
“வாருங்கள்
மாண்டுபோன எம் மண்ணினை மீட்டிட
உழைப்பு யாவையும்
ஒருமுகப் படுத்துவோம்.”

உங்களுக்குக் கேட்கவில்லையா?

-முருகையன்

0 Kommentare:

Kommentar veröffentlichen