மக்களின் நிலங்களை விரைவில் விடுவியுங்கள் ஆனந்தன் எம்.பி வலியுறுத்து

னார் முள்ளிக்குளம் கிராம மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய இரண்டு பிரதான தொழில்களும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் உடனடியாக குறித்த மக்களின் நிலங்களை விடுவிக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால்  அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு தங்களை மீள்குடியேற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 23ஆம் திகதி வியாழக்கிழமை காலை ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று சனிக்கிழமை மூன் றாவது நாளாகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகியோர் நேற்று சனிக்கிழமை காலை முள்ளிக் குளம் கிராம மக்கள் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதன்போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பல வருட காலமாக முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் தமது பூர்வீக கிராமத்தை இழந்து மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நூற்றுற்கும் மேற்பட்ட குடும்பங்கள்  நிர்க்கதி அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றன.
எனவே  அரசாங்கம் 2015 ஆம் ஆண்டும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கி மக்களின் காணி விடுவிப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் தற் போது இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது மீண்டும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளது.
எனினும் அரசாங்கம் இதற்காக இரண்டு வருட காலத்தை இழுத்தடித்து ஏமாற்றாமல் உடனடியாக மக்களினுடைய காணி, அதாவது முள்ளிக்குளம் மக்களாக இருக்கலாம், கேப்பாப்பிலவு மக்களாக இருக்கலாம், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு-கிழக்கு மக்களாக இருக்கலாம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பொது மக்களின் சொந்தமான காணிகளை அரசாங்கம் எவ்வளவு விரைவாக மக்களின் காணிகளை கையளிக்க முடியுமோ அதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen