மஹிந்தவுக்கும், கோத்தபாயவுக்கும் கடவுள் கட்டாயம் தண்டனை கொடுப்பான்! கண்ணீர் விட்டு கதறும் இஸ்லாமிய தாய்

மஹிந்தவுக்கும், கோத்தபாயவுக்கும் கடவுள் கட்டாயம் தண்டனை கொடுப்பான். நாம் எம் வயிறு எரிஞ்சு சொல்கிறேன் என மகன் ஒருவன் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் இஸ்லாமிய தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்று வரும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள குறித்த இஸ்லாமிய தாய் மேலும் தெரிவித்ததாவது,

நான் கொழும்பில் இருந்து வந்திருக்கின்றேன். எனது மகனின் பெயர் முஹமது ஹக்கீம். கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி எனது மகனை கொழும்பில் வைத்து கடத்தினார்கள். நான் கொழும்பில் எல்லா இடமும் தேடியும் எனது மகன் பற்றி எதுவுமே சொல்கிறார்கள் இல்லை. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி 20 பஸ்களில் ஆட்களை அலரி மாளிகைக்கு கொண்டு வந்தாங்கள். அதில் பார்த்தேன் என்னுடைய மகன் மாதிரி ஒருவர் இருந்தார். அனுராதபுரம், மதவாச்சி, வவுனியா, காத்தான்குடி, திருகோணமலை என அந்த பேரூந்துகளில் போட் போடப்பட்டிருந்தது. திரும்பி அந்த பேரூந்துகள் வவுனியாவுக்கு சென்று விட்டது என்று அங்கு நின்றவர்கள் சொன்னார்கள். அப்போது நான் ஒரு சின்னப் போட்டோவைக் காட்டி இதற்குள் எனது புள்ளை நிற்கிறான். அவனை ஒருக்கா பாருங்க என்றேன்.

அதைப் பார்த்தால் எனக்கு என்னுடைய வேலை இல்லாமல் போய்விடும் எனக் கூறி பார்க்க மறுத்து விட்டார்கள். எனக்கு பைத்தியம் என ஏசியார்கள். இதற்கு மஹிந்த ராஜபக்ஸவும், கோத்தபாயவும் தான் பொறுப்பு. அவர்களும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் தானே. அவர்கள் ஏன் எமது கஸ்ரத்தை உணரவில்லை. நிச்சயமாக அவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பான். இதனை நாம் வயிறு எரிஞ்சு சொல்லுறம். அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என கண்ணீர் விட்டழுதார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen